உறவினர்கள், நண்பர்கள் உள்பட யாரும் பெண் குழந்தைகளை தொட்டு பேச அனுமதிக்க கூடாது சார்பு நீதிபதி பிரித்தா யோசனை


உறவினர்கள், நண்பர்கள் உள்பட யாரும்  பெண் குழந்தைகளை தொட்டு பேச அனுமதிக்க கூடாது  சார்பு நீதிபதி பிரித்தா யோசனை
x
தினத்தந்தி 12 Aug 2021 2:00 PM GMT (Updated: 12 Aug 2021 2:00 PM GMT)

உறவினர்கள், நண்பர்கள் உள்பட யாரும் பெண் குழந்தைகளை தொட்டு பேச அனுமதிக்க கூடாது என்று சார்பு நீதிபதி பிரித்தா தெரிவித்துள்ளார்.

ஸ்பிக்நகர்:
உறவினர்கள், நண்பர்கள் உள்பட யாரும் பெண் குழந்தைகளை தொட்டு பேச அனுமதிக்க கூடாது என்று சார்பு நீதிபதி பிரித்தா தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வு முகாம்
தூத்துக்குடி முத்தையாபுரம் ஜெ.எஸ் நகரில் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பிரித்தா தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அனுமதிக்க கூடாது
பாலியல் பிரச்சினையில் ஆண்,  பெண் என்ற பாகுபாடு இல்லாமல் குழந்தைகள் என்ற ரீதியில் முதலில் பார்க்க வேண்டும். பெண் குழந்தைகளை உறவினர் மற்றும் நண்பர்கள் யாரும் தொட்டு பேச அனுமதிக்கக்கூடாது.
இந்த சட்டத்தின் மூலம் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியே தான் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும். போலீசார் பாதிக்கப்பட்ட குழந்தையின் இருப்பிடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை செய்ய வேண்டுமே தவிர பாதிக்கப்பட்ட குழந்தையை விசாரணைக்கு வரும்படி வற்புறுத்தக் கூடாது. மேலும் 60 நாட்களுக்குள் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 
நெரடியாக விசாரிக்க முடியாது
எந்த ஒரு இடத்திலும் பாதிக்கப்பட்ட நபரின் பெயரோ, புகைப்படமோ வெளியாகாது. பாதிக்கப்பட்ட நபரிடம் எதிர்த்தரப்பு வக்கீல் நேரடியாக விசாரணை நடத்த முடியாது. நீதிபதியின் மூலமாகவே கேள்விகள் கேட்க முடியும். எனவே பாதிக்கப்பட்ட நபர்கள் இதுகுறித்து புகார் அளிக்க எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு நீதிபதி விளக்கம் அளித்தார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story