பொள்ளாச்சி பகுதியில் 50 பேருக்கு கொரோனா


பொள்ளாச்சி பகுதியில் 50 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 12 Aug 2021 5:48 PM GMT (Updated: 12 Aug 2021 5:48 PM GMT)

பொள்ளாச்சி பகுதியில் 50 பேருக்கு கொரோனா உறுதியானதுடன், பெரியகுயிலியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் 50 பேருக்கு கொரோனா உறுதியானதுடன், பெரியகுயிலியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 

50 பேருக்கு கொரோனா 

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் கொரோனா 2-வது அலையில் இதுவரைக்கும் 11 ஆயிரத்து 936 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 11 ஆயிரத்து 419 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் 108 பேர் கொரோனா பாதித்து இறந்து உள்ளனர்.

இந்த நிலையில்  பொள்ளாச்சி நகராட்சி, ஆனைமலை ஒன்றியம், கிணத்துக்கடவு ஒன்றிய பகுதிகளில் தலா 6 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 18 பேருக்கும், தெற்கு ஒன்றியம், சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் தலா 7 பேருக்கும் சேர்த்து பொள்ளாச்சி பகுதியில் மொத்தம் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் 

வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பணிக்கம்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த தொழிற்சாலை உள்ள பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 சுல்தான்பேட்டை பகுதியில் கொரோனா பாதிப்பு குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில்  பெரியகுயிலி என்ற கிராமத்தில் ஒரே வீட்டை சேர்ந்த 2 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா உறுதியானது. 

வீதி அடைப்பு 

இதையடுத்து, சுல்தான்பேட்டை வட்டார ஆணையாளர் சாய் ராஜ் சுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அதிகாரி சிவகாமி, வட்டார மருத்துவ அதிகாரி வனிதா ஆகியோர் உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் சுகாதார ஊழியர்கள் பெரியகுயிலிக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் அங்கு ஒரே வீட்டை சேர்ந்த 5 பேர் பாதிக்கப்பட்ட பகுதியின் வீதியை தடுப்புகைளை வைத்து அடைத்தனர். அதுபோன்று அங்கு கொரோனா பரவலை தடுக்க தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Next Story