பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் அதிகாரி விஷம் குடித்து தற்கொலை


பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் அதிகாரி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 16 Aug 2021 8:25 PM GMT (Updated: 16 Aug 2021 8:25 PM GMT)

நெல்லை அருகே பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு பணிச்சுமை காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கூடல்:
நெல்லை அருகே பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு பணிச்சுமை காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணி மேற்பார்வையாளர்

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே நன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 48). இவர் நெல்லை அருகே பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார்.

இவருடைய மனைவி உஷா சுப்புலட்சுமி. இவர்களுக்கு வட்சன் (14) என்ற மகன் உள்ளார். தற்போது ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் முக்கூடலில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

விஷம் குடித்து...

நேற்று காலையில் வழக்கம்போல் ராதாகிருஷ்ணன் பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்துக்கு பணிக்கு சென்றார். பின்னர் அவர், யூனியன் அலுவலக மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று அமர்ந்தார். அங்கு சிறிதுநேரத்தில் ராதாகிருஷ்ணன் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் விரைந்து சென்று, ராதாகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக முக்கூடல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதுகுறித்து முக்கூடல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று, இறந்த ராதாகிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்தீபன், பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்துக்கு சென்று ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

பணிச்சுமை காரணமா?

ராதாகிருஷ்ணன் பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை அருகே யூனியன் அலுவலகத்தில் அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story