இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மக்கள் நாடாளுமன்ற கூட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மக்கள் நாடாளுமன்ற கூட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2021 6:54 PM GMT (Updated: 25 Aug 2021 6:54 PM GMT)

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்டத்தில் 20 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.

கடலூர், 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்டம், தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணைகள் மற்றும் சேவைகள் சட்டம் ஆகிய சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் நல சட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் 23-ந் தேதி முதல் 27-ந் தேதி (நாளை வெள்ளிக்கிழமை) வரை 5 நாட்கள் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் 5 ஆயிரம் இடங்களில் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்திருந்தனர். அதன்படி கடந்த 23-ந் தேதி முதல் தமிழகத்தில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது.

மக்கள் நாடாளுமன்ற கூட்டம்

அதன்படி கடலூரில் நேற்று மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட செயலாளர் சுந்தர்ராஜா தலைமை தாங்கினார். நகர செயலாளர் அரிகிருஷ்ணன், வட்ட பொருளாளர் ஜெயராஜ், வட்டக்குழு நாகராஜ், பாக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் இந்த மக்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.
இதில் மாவட்ட செயலாளர் துரை, மாநிலக்குழு குளோப், வட்ட செயலாளர் தமிழ்மணி, சம்பந்தம், வட்டக்குழு இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 20 இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) மாவட்டத்தில் சி.என்.பாளையம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற உள்ளது.

Next Story