வனக்காப்பாளரை தாக்கிய கணவர் மீது வழக்கு


வனக்காப்பாளரை தாக்கிய கணவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 Aug 2021 6:29 PM GMT (Updated: 28 Aug 2021 6:29 PM GMT)

குடும்பம் நடத்த வருமாறு வனக்காப்பாளரை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நொய்யல், 
குடும்பத்தகராறு
நொய்யல் அருகே கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகன் சதீஸ்குமார் (வயது 35). இவர் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியங்கா (25). இவர் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள வனத்துறையில் வனக்காப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 9 வயதில் செந்தமிழ் செல்வன் என்ற மகன் உள்ளார்.
இந்தநிலையில் குடும்பத்தகராறு காரணமாக பிரியங்கா தனது கணவரை பிரிந்து கரூர் மேற்கு ஆண்டாங்கோயில் அருகே மொச்சக்கொட்டாம்பாளையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தனது மகனுடன் வசித்து வருகிறார். மேலும் விவகாரத்து கோரி கரூர் நீதிமன்றத்தில் பிரியங்கா வழக்கு தொடர்ந்துள்ளார்.
தாக்குதல்
கடந்த 26-ந் தேதி மதியம் 3 மணியளவில் பிரியங்காவும், அவரது மகன் செந்தமிழ்ச்செல்வனும் கவுண்டன்புதூரில் உள்ள சதீஸ்குமார் வீட்டிற்கு சென்றுள்ளனர். 
அங்கு சென்ற பிரியங்கா தனது மகனுடைய கல்வி சான்றிதழ் மற்றும் துணிகளை எடுக்க போனபோது சதீஷ்குமார், பிரியங்காவை தகாத வார்த்தைகளால் திட்டி கீழே கிடந்த தென்னை மட்டையால் அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
கொலை மிரட்டல்
மேலும், தன்னுடன் குடும்பம் நடத்த வராவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று சதீஷ்குமார் மிரட்டியதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் பிரியங்கா புகார் அளித்தார். 
இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story