குடிபோதையில் தகராறு செய்ததால் கழுத்தை இறுக்கி பெயிண்டர் கொலை மனைவி வெறிச்செயல்


குடிபோதையில் தகராறு செய்ததால் கழுத்தை இறுக்கி பெயிண்டர் கொலை மனைவி வெறிச்செயல்
x
தினத்தந்தி 29 Aug 2021 9:09 AM GMT (Updated: 29 Aug 2021 9:09 AM GMT)

குடிபோதையில் தகராறு செய்ததால் கழுத்தை இறுக்கி பெயிண்டர் கொலை மனைவி வெறிச்செயல்

பரமத்திவேலூர்:
குடிபோதையில் தகராறு செய்ததால் பெயிண்டரை மனைவியே கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பெயிண்டர்
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள இளநகர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் வீராச்சாமி. இவருடைய மகன் ரகுபதி (வயது 31). பெயிண்டர். இவருடைய மனைவி அருணா (26). இவர்களுக்கு 6 மற்றும் 3 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் ரகுபதி கடந்த 26-ந் தேதி இரவு மனைவி மற்றும் மகன்களுடன் தூங்கி கொண்டிருந்தார். 
இதையடுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ரகுபதி இறந்து கிடந்தார். இதுகுறித்து அருணா வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகுபதியின் உடலை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணை
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் ரகுபதியின் கழுத்தில் காயங்கள் இருப்பதாக தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த வேலகவுண்டம்பட்டி போலீசார் அருணாவிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து போலீசார் அருணாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். 
அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விசாரணையில் கணவர் ரகுபதி அடிக்கடி மது குடித்து விட்டு வந்து அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். தனக்கு பெற்றோர் இல்லாததால் இதுகுறித்து ரகுபதியின் பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனால் அவர்கள் இதுதொடர்பாக மகனை கண்டிக்கவோ, தட்டி கேட்கவோ இல்லை. இதையடுத்து நாட்கள் செல்ல செல்ல ரகுபதி் குடித்து விட்டு வந்து செய்யும் அட்டூழியம் அதிகரிக்க தொடங்கியது.
பரபரப்பு
ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அருணா கணவரை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி 26-ந் தேதி இரவு ரகுபதி தூங்கி கொண்டிருந்தபோது ஆடு கட்டும் கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 
இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அருணாவை கைது செய்தனர். குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்ததால் கணவரை மனைவியே கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
==========

Next Story