பெண் உள்பட 2 பேர் பலி


பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 29 Aug 2021 7:15 PM GMT (Updated: 29 Aug 2021 7:15 PM GMT)

பழனி பகுதியில் நடந்த வெவ்வேறு விபத்துக்களில் பெண் உள்பட 2 பேர் பலியாகினர்.

பழனி: 

மொபட்-மோட்டார் சைக்கிள் மோதல்
பழனி அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்த கண்டிமுத்து மனைவி சின்னாத்தாள் (வயது 58). இவர், நேற்று முன்தினம் இரவு தனது மருமகள் சரண்யாவுடன் மொபட்டில் சின்னாக்கவுண்டன்புதூர் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மொபட்டை சரண்யா ஓட்டினார். 
அய்யம்பாளையம் அருகே ஒரு வளைவில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள், மொபட் மீது மோதியது. இதில் கீழே விழுந்த சின்னாத்தாள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

சரண்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்த பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சின்னாத்தாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர் பலி
இதேபோல் பழனி தெற்கு அண்ணாநகரை சேர்ந்தவர் மாரியப்பன் (50). இவர் பழனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர், பழனி சுப்பிரமணியபுரம் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியே வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மாரியப்பன் மீது மோதியது. 

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story