கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்


கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
x
தினத்தந்தி 29 Aug 2021 7:38 PM GMT (Updated: 29 Aug 2021 7:38 PM GMT)

கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு வில்லேந்தி வேலவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் வில்லேந்தி வேலவருக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வில்லேந்தி வேலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கு கிருத்திகை வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்தனர்.
இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்தர நாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவிலிலும், கோடாலி கருப்பூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவிலிலும் கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து கோவில்களிலும் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Next Story