சேலத்தில் பயங்கரம்: கல்லால் தாக்கி பெண் கொலை-தொழிலாளி கைது


சேலத்தில் பயங்கரம்: கல்லால் தாக்கி பெண் கொலை-தொழிலாளி கைது
x
தினத்தந்தி 29 Aug 2021 9:29 PM GMT (Updated: 29 Aug 2021 9:29 PM GMT)

சேலத்தில் கல்லால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

சேலம்:
சேலத்தில் கல்லால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி. இவர்களது வீட்டுக்கு அருகில் அவரது நெருங்கிய உறவினரான கோபால் என்பவரின் மனைவி விஜயா (50) வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்தோஷ்குமார், கோகுல்ராஜ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கோவிந்தராஜிக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. இதனால் தினமும் அவர் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவார். அப்போது, வீட்டின் வெளியே நின்று கொண்டு அக்கம் பக்கத்தினரையும், சாலையில் செல்பவர்களையும் ஆபாசமாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும், அடிக்கடி தகராறிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மதுபோதையில் தகராறு
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மது அருந்திவிட்டு வந்த கோவிந்தராஜ், போதையில் அக்கம்பக்கத்தினரை ஆபாசமாக பேசி உள்ளார். அப்போது விஜயா பற்றி தவறாக பேசியதாக கூறப்படுகிறது. 
இதனால் அதிர்ச்சி அடைந்த கோகுல்ராஜ், தனது தாயை பற்றி பேசியது குறித்து கோவிந்தராஜிடம் கேள்வி கேட்டுள்ளார். அப்போது, அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயா, இருவரையும் விலக்கிவிட முயன்றார். அப்போது ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், கல்லால் கோகுல்ராஜை தாக்க முயன்றார். ஆனால் விஜயா மீது கல் விழுந்ததால் அவரது தலையில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 5 ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு விஜயாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், கொலையுண்ட விஜயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயாவை கொலை செய்த கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
சேலத்தில் மதுபோதையில் கல்லால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story