வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 30 Aug 2021 12:48 PM GMT (Updated: 30 Aug 2021 12:48 PM GMT)

வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி பிரையண்ட்நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் சுரேஷ் (வயது 21). இவரும், தூத்துக்குடி முனியசாமிநகர் 1-வது தெருவை சேர்ந்த பிரான்சிஸ் மகன் ராகுல் (22) என்பவரும் நண்பர்கள். இந்த நிலையில் சுரேஷ், அடிக்கடி ஒரு பெண்ணை பின்தொடர்ந்து சென்றாராம்.
இதைத்தொடர்ந்து ராகுலின் தந்தை பிரான்சிஸ், உறவினர் செல்வகுரு ஆகியோரின் தூண்டுதலின் பேரில், ராகுல், தனது நண்பர்கள் 3 செண்ட் அந்தோணியார்புரத்தை சேர்ந்த முத்துமீரான் (22), தபால் தந்தி காலனியை சேர்ந்த ராஜபாண்டி (21) ஆகியோருடன் பிரையண்ட்நகர் 12-வது தெருவில் நின்று கொண்டு இருந்த சுரேசை அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்ய முயன்றனர். இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துமீரான், ராஜபாண்டி, பிரான்சிஸ், செல்வகுரு ஆகியோரை கைது செய்தனர்.

Next Story