மழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம்


மழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம்
x
தினத்தந்தி 30 Aug 2021 5:00 PM GMT (Updated: 30 Aug 2021 5:00 PM GMT)

மழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் உறுதியளித்தார்.

புதுச்சேரி, ஆக.
மழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் உறுதியளித்தார்.
புதுவை சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் (தி.மு.க.) சிவா எழுப்பிய பிரச்சினையை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-
மழையால் பாதிப்பு
சிவா:- புதுவையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் வேளாண் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தற்போது இன்சூரன்சையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அவர்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்கவேண்டும்.
செந்தில்குமார் (தி.மு.க.):- இந்த மழையினால் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் பாதித்துள்ளன. ஆனால் வேளாண்துறையில் 100 ஏக்கர் நிலம்தான் பாதிப்பு என்ற கணக்கு உள்ளது. மற்றவர்கள் நிவாரணத்துக்கு ஏன் பதியவில்லை. இது யார் தவறு?
அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்:- இதுதொடர்பாக வேளாண்துறை இயக்குனரிடம் விவரம் கேட்டு உள்ளேன்.
நாஜிம் (தி.மு.க.):- காரைக்கால் பகுதியையும் இதில் சேர்க்கவேண்டும்.
உரிய நிவாரணம்
துணை சபாநாயகர் ராஜவேலு:- இது விவசாயிகளின் பிரச்சினை. இதற்காக ஆட்சியை குறைகூற வேண்டாம். அனைவரது கோரிக்கையும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவேண்டும் என்பதுதான்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி:- எங்கள் அரசு விவசாயிகளின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். நெல், வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு பாதிப்புக்கு உரிய நிவாரணம் தர அரசு நடவடிக்கை எடுக்கும்.
நெல் கொள்முதல்...
நாஜிம்:- காரைக்கால் பகுதியில் அரசு நெல் கொள்முதல் செய்யவேண்டும்.
பி.ஆர்.சிவா (சுயே) தமிழகத்தில் நெல் கொள்முதல் சிறப்பாக செய்யப்படுகிறது. அதேபோல் நாமும் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்:- நெல் கொள்முதல் தொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்திய உணவுக்கழகத்திடம் பேசி வருகிறோம்.
செந்தில்குமார்:- நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.1,940. ஆனால் நானே குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,500-க்குததான் விற்றேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story