திருவொற்றியூரில் இருந்து கோவை, ராமேசுவரத்திற்கு புதிய விரைவு பஸ்கள் இயக்கம்


திருவொற்றியூரில் இருந்து கோவை, ராமேசுவரத்திற்கு புதிய விரைவு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 31 Aug 2021 9:32 AM GMT (Updated: 31 Aug 2021 9:32 AM GMT)

திருவொற்றியூரில் இருந்து சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்க திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.சங்கரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அதன்படி போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவின் பேரில், புதிய வழித்தடங்களில் பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன. அந்த வகையில், திருவொற்றியூரில் இருந்து கோவை மற்றும் ராமேசுவரத்திற்கு தலா ஒரு விரைவு பஸ்சும், திருவொற்றியூரில் இருந்து தாம்பரம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பிராட்வே, கோயம்பேடு உள்ளிட்ட 6 புதிய வழித்தடங்களில் 8 பஸ்கள் அஜாக்ஸ் பஸ் நிலையத்திலிருந்து நேற்று முதல் இயக்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம், வடசென்னை எம்.பி.டாக்டர் கலாநிதி வீராசாமி, விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம், மாநகர போக்குவரத்து பொதுமேலாளர் செல்வமணி, தி.மு.க. தொழிற்சங்க பொருளாளர் நடராஜன், பகுதி செயலாளர் தி.மு.தனியரசு ஆகியோர் விரைவு பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Next Story