வீடுகள், பாலத்தை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்


வீடுகள், பாலத்தை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 31 Aug 2021 5:06 PM GMT (Updated: 31 Aug 2021 5:06 PM GMT)

வீடுகள், பாலத்தை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்

கூடலூர்

ஸ்ரீ மதுரை, ஓவேலி பகுதிகளில் வீடுகள், பாலத்தை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தின. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

வீடுகளை உடைத்தது அட்டகாசம்

கூடலூர் தாலுகா ஸ்ரீ மதுரை ஊராட்சி, நாடுகாணி, தேவாலா பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் நாடுகாணி பகுதியில் 4 கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் காட்டு யானைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்ரீ மதுரை ஊராட்சி ஓடக்கொல்லி பகுதியில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். தொடர்ந்து அப்பகுதியை காட்டு யானை சேர்ந்த ஜார்ஜ் குட்டி, வெள்ளச்சி ஆகியோரின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தியது. இதில் 2 பேரின் வீடுகளும் பலத்த சேதமடைந்தது.

 நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இந்த சமயத்தில் வீட்டுக்குள் இருந்த ஜார்ஜ் குட்டி மற்றும் வெள்ளச்சி குடும்பத்தினர் பயத்தில் கூச்சலிட்டனர். இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து, ஒலி எழுப்பி காட்டு யானையை விரட்டி அடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

காட்டுயானைகள் விவசாய பயிர்கள் வீடுகளை தினமும் உடைத்து வருகிறது ஆனால் இழப்புக்கு ஏற்ப வனத்துறையினர் நஷ்டஈடு தருவதில்லை. காட்டு யானை வராமல் தடுப்பதற்கான நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் தினந்தோறும் காட்டு யானைகளால் பாதிப்பு ஏற்படுகிறது. 

இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இரும்பு பாலம், வாழைகள் சேதம்

இதேபோல் ஓவேலி பேரூராட்சி சூண்டி அருகே உள்ள மரப்பாலம் பகுதிக்குள் காட்டு யானைகள் புகுந்தன. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஆற்று வாய்க்காலை கடப்பதற்காக பொதுமக்கள் சார்பில் வைத்திருந்த இரும்பு பாலத்தை காட்டு யானைகள் சேதப்படுத்தியன.

மேலும் அப்பகுதியில் அறுவடைக்குத் தயாராக நின்றிருந்த வாழைகளை காட்டு யானைகள் மிதித்தும், தின்றும் நாசம் செய்தன. பின்னர் அங்கு நின்ற யானைகள், நீண்ட நேரத்திற்கு பிறகு வனப்பகுதிக்கள் சென்றன. அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.

Next Story