தற்கொலை செய்த விவசாயி உடலை வாங்கமறுத்து மறியல்


தற்கொலை செய்த விவசாயி உடலை வாங்கமறுத்து மறியல்
x
தினத்தந்தி 1 Sep 2021 8:36 PM GMT (Updated: 1 Sep 2021 8:36 PM GMT)

விவசாயி தற்கொலைக்கு காரணமான தனியார் வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பு விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி, செப்.2-
விவசாயி தற்கொலைக்கு காரணமான தனியார் வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பு விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் வங்கியில் கடன்
திருச்சி அருகே உள்ள பேரூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் விவசாயி மருதமுத்து (வயது 75). இவர் விவசாய நிலத்தை அடமானம் வைத்து திருச்சி உறையூரில் உள்ள இகோடாஸ் என்ற தனியார் வங்கியில் ரூ.1 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது.  இதற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6 ஆயிரம் தவணை செலுத்த வேண்டும்.
இந்நிலையில், கொரோனாவால் அறிவிக்கப்பட்ட தொடர் ஊரடங்கு காரணமாக விவசாயத்தில் அன்றாட வருமானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 3 மாதங்களாக மருதமுத்தால் சரிவர தவணை செலுத்த இயலவில்லை.
தற்கொலை
வங்கி ஊழியர்கள் நேரடியாக வீட்டுக்கு வந்து தவணை செலுத்த வேண்டி மருதமலைக்கு நெருக்கடி கொடுத்தனர். 2 நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த வங்கி ஊழியர்கள், உடனடியாக தவணைத் தொகையை கட்டி ஆக வேண்டும் எனவும், அதுவரை வீட்டை விட்டு செல்ல மாட்டோம் எனக் கூறி வீட்டு திண்ணைில் அமர்ந்து விட்டனர்.
இதனால் பெரும் அவமானத்திற்குள்ளான மருதமுத்து, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜீயபுரம் போலீசார், மருதமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மறியல் போராட்டம்
இந்த நிலையில் நேற்று மதியம் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்தது. அப்போது விவசாயி மருதமுத்துவின் உடலை உறவினர்கள் மற்றும் விவசாயிகள் வாங்க மறுத்தும், விவசாயி தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி திருச்சி அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய சங்க பிரதிநிதிகள் அய்யாக்கண்ணு, அயிலை சிவசூரியன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்களிடம் போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக, திருச்சி அரசு மருத்துவமனை  முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story