தடுப்புச்சுவரில் இருந்து தவறி விழுந்து காட்டெருமை படுகாயம்


தடுப்புச்சுவரில் இருந்து தவறி விழுந்து காட்டெருமை படுகாயம்
x
தினத்தந்தி 2 Sep 2021 1:00 AM GMT (Updated: 2 Sep 2021 1:00 AM GMT)

குன்னூர்-கோத்தகிரி சாலையோரத்தில் தடுப்புச்சுவரில் இருந்து தவறி விழுந்து காட்டெருமை படுகாயம் அடைந்தது. அதனை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

குன்னூர்

குன்னூர்-கோத்தகிரி சாலையோரத்தில் தடுப்புச்சுவரில் இருந்து தவறி விழுந்து காட்டெருமை படுகாயம் அடைந்தது. அதனை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். 

காட்டெருமை படுகாயம்

குன்னூரில் நகர்புற மற்றும் கிராமபுற பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் குன்னூர்-கோத்தகிரி சாலையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டெருமைகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. 

இங்கிருந்து உணவு தேடி 8 வயது மதிக்கத்தக்க காட்டெருமை ஒன்று வெளியே வந்தது. அப்போது சாலையோர தடுப்புச்சுவரில் இருந்து குன்னூர்-கோத்தகிரி சாலையில் காட்டெருமை தவறி விழுந்தது. இதில் காலில் படுகாயம் அடைந்த காட்டெருமை எழுந்து நடக்க முடியாமல் அவதிப்பட்டது. 

வனத்துறையினர் சிகிச்சை

இதுகுறித்து வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள அந்த காட்டெருமைக்கு தண்ணீர் மற்றும் பசுந்தீவனம் வழங்கினர். பின்னர் காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி கால்நடை டாக்டர் பார்த்தசாரதி வரவழைக்கப்பட்டார். 

அவர் காட்டெருமைக்கு மயக்கி ஊசி செலுத்தினார். தொடர்ந்து கிரேன் கொண்டு வரப்பட்டு, சுமார் 3 மணி போராட்டத்துக்கு பிறகு லாரியில் காட்டெருமை ஏற்றப்பட்டது.  பின்னர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு காட்டெருமைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


Next Story