அடகு கடையின் பூட்டை உடைத்து 1½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு


அடகு கடையின் பூட்டை உடைத்து 1½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Sep 2021 5:01 PM GMT (Updated: 2 Sep 2021 5:01 PM GMT)

மன்னார்குடியில் அடகு கடையின் பூட்டை உடைத்து 1½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகி்ன்றனர்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பத்மசாலவர் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது32). இவர் மன்னார்குடி கீழபாலம் பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார்.

இவர் நேற்றுமுன்தினம் வியாபாரம் முடிந்த பின்னர் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக கடை உரிமையாளர் கார்த்திக்கிற்கு அருகில் இருப்பவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கார்த்திக் மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

1½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

தகவல் அறிந்ததும் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்திரன், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அலமாரியில் இருந்த 1½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மேலும் கடை உள்ளே இருந்த லாக்கரை மர்மநபர்கள் உடைக்க முடியாததால் அதில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகள் தப்பின. இதுகுறித்து கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story