ரூ.600 கோடியில் 2 இடங்களில் உயர்மட்ட சாலை


ரூ.600 கோடியில் 2 இடங்களில் உயர்மட்ட சாலை
x
தினத்தந்தி 2 Sep 2021 7:49 PM GMT (Updated: 2 Sep 2021 7:49 PM GMT)

திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.600 கோடியில் 2 இடங்களில் உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

திருச்சி, செப்.3-
திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.600 கோடியில் 2 இடங்களில் உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
கோவில்கள்
திருச்சி மாவட்டம் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் உள்ளது. திருச்சியில் இருந்து தமிழகத்தின் எந்த நகரத்திற்கும் 5 முதல் 10 மணி நேரத்தில் சென்று விட முடியும். திருச்சியில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், உறையூர் வெக்காளியம்மன் கோவில், பஞ்சவர்ண சுவாமி கோவில் போன்ற பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்கள் அமைந்துள்ளன. இதுமட்டுமின்றி திருச்சி மாவட்டத்தின் புறநகர் பகுதியில் சமயபுரம் மாரியம்மன் கோவில், வயலூர் முருகன் கோவில் என்று ஏராளமான கோவில்கள் அமைந்துள்ளன.
சுற்றுலா பயணிகள்
இந்த கோவில்களுக்கு செல்ல தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் திருச்சிக்கு தினமும் வந்து சென்றவண்ணம் உள்ளனர். இதுதவிர முக்கொம்பு, கல்லணை உள்ளிட்ட சுற்றுலாதளங்களுக்கு செல்லவும் திருச்சிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
மேலும் புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வியாபாரம் நிமித்தமாக திருச்சிக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இதனால் திருச்சிக்கு தினமும் வந்து செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
மேலும் சென்னை, மதுரை, கோவைக்கு அடுத்தபடியாக திருச்சி மாநகரில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ற சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதன்காரணமாக மாநகர் பகுதியில் வலம் வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதுடன், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க மாநகரை ஒட்டிய விரிவாக்க பகுதிகளை உள்ளடக்கி புதிய வழித்தடங்களில் சாலைகள் அமைக்கவும், போக்குவரத்து நெரிசலுள்ள பகுதிகளில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ரூ.600 கோடியில் உயர்மட்ட சாலைகள்
இந்தநிலையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் மானியக் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்புகளை சட்டசபையில் கடந்த வாரம் அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார். அப்போது, ‘திருச்சியில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பதற்காக அரைவட்ட சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றும், தலைமை தபால் நிலையத்திலிருந்து முத்தரையர் சிலை வழியாக கோர்ட்டு அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா வரை உயர்மட்ட சாலைஅமைக்கப்படும். ஓடத்துறை காவிரி பாலத்திலிருந்து அண்ணாசிலை, குடமுருட்டி சோதனைச்சாவடி வழியாகமல்லாச்சிபுரம் வரை உயர் மட்ட சாலை அமைக்கப்படும் என்றும் கூறினார். இதுபற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஓடத்துறை காவிரி பாலம் முதல் அண்ணா சிலை, கலைஞர் அறிவாலயம் வழியாக மல்லாட்சிபுரம் வரை சுமார் 2 கி.மீ நீளத்திற்கு ரூ.400 கோடி மதிப்பில் இருவழிச்சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதில் இந்த சாலையில் இருந்து சத்திரம் பஸ்நிலையம் பகுதியில் இறங்கவும், ஏறவும், கலைஞர் அறிவாலயம் பகுதியில் இருந்து ஏறவும், இறங்கவும் வழிவகை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு சில பகுதிகளில் நிலங்கள் தேவைப்படும். அதுபோல் தலைமை தபால் நிலையம் முதல் எம்.ஜி.ஆர்.சிலை வரை சுமார் 1.5 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.200 கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை இருவழிப்பாதையாக அமைக்கப்பட உள்ளது. இந்த பாலத்தில் ஒரு பகுதியில் ஏறினால் முடியும் இடத்தில் தான் இறங்கமுடியும்.
பொதுமக்கள் வரவேற்பு
இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, புதுக்கோட்டை சாலையில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சுகள் செல்ல வேண்டும் என்றால் திருச்சி தபால் நிலைய சிக்னல், பறவைகள் சாலை சந்திப்பு, முத்தரையர் சிலை சிக்னல்,ஹீபர்சாலை-ரொனால்ட்ஸ் ரோடு சந்திப்பு ஆகியவற்றை கடந்து தான் செல்லவேண்டும். இதனால் மிகவும் சிரமமாக இருக்கும். இதுபோல் ஓடத்துறை பாலம் முதல் குடமுருட்டி சோதனைச்சாவடி வரை உள்ள சாலையில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் காணப்படும். இந்த சூழலில் இந்த இரு பகுதியிலும் உயர்மட்ட சாலை அமைக்க அரசு முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது. தற்போது இந்த பகுதிகளில் பறக்கும் சாலை அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், சிக்னல்களில் நிற்க வேண்டிய அவசியம் கிடையாது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் மிச்சமாகும். இதுபோல் சத்திரம் பஸ்நிலைய பகுதியில் இருந்து மரக்கடை, பாலக்கரை, மேலப்புத்தூர் வழியாக திருச்சி ரெயில்வே ஜங்ஷன் வரை உயர்மட்ட சாலையும், அதில் காந்தி மார்க்கெட் முதல் பால்பண்ணை வரை உயர்மட்ட சாலை அமைத்தால் இன்னும் போக்குவரத்து நெரிசல் பல மடங்கு குறையும் என்றனர்.

Next Story