பெரும்பான்மை இல்லாத நிலையில் ஏரியூர் ஒன்றியக்குழு தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்


பெரும்பான்மை இல்லாத நிலையில் ஏரியூர் ஒன்றியக்குழு தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 3 Sep 2021 4:47 PM GMT (Updated: 3 Sep 2021 4:49 PM GMT)

பெரும்பான்மை இல்லாத நிலையில் ஏரியூர் ஒன்றியக்குழு தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியக்குழு துணை தலைவர் தனபால் மற்றும் கவுன்சிலர்கள் நேற்று தர்மபுரி கலெக்டர் திவ்யதரிசினியிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:-

ஏரியூர் ஒன்றியக்குழு தலைவர் பொறுப்பில் இருக்கும் பழனிசாமி என்பவர் துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்களிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து அவர் பல்வேறு முறைகேடுகள் செய்து வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளார். ஊராட்சி ஒன்றியத்தில் தனி நபர்களுக்கு பணிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு ஊழல் நடந்துள்ளது.

ஊராட்சி ஒன்றியத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் தலைவரிடம் கேட்டால் பதில் கூறுவது இல்லை. ஒன்றியத்தில் உள்ள அனைத்து கட்சி கவுன்சிலர்களும் தலைவருக்கு எதிராக நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் எந்த பணிகளும் நடைபெறாமல் முடங்கி உள்ளது.

பதவி நீக்கம்

ஊராட்சி ஒன்றிய கூட்டங்களில் தொடர்ந்து பெரும்பான்மை இல்லாத நிலையில் ஏரியூர் ஒன்றியக்குழு தலைவரை பதிவு நீக்கம் செய்ய வேண்டும். ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்வதில் நடந்துள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். நிர்வாக நலன் கருதி ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு தனி அலுவலரை நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒன்றியக்குழு தலைவர் பழனிசாமி, துணை தலைவர் மீது கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார். இந்த நிலையில் தலைவர் மீது துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story