குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் விருத்தாசலம் அருகே பரபரப்பு


குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் விருத்தாசலம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 3 Sep 2021 5:19 PM GMT (Updated: 3 Sep 2021 5:19 PM GMT)

விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம், 

குழாய் உடைப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கார்மாங்குடி ஊராட்சிக்குட்பட்ட 6-வது வார்டில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொதுக்குழாய்கள் மூலம் தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. 
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக 6-வது வார்டு மக்களுக்கு குடிநீர் வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் நேற்று மாலை அங்குள்ள விருத்தாசலம்- பவழங்குடி செல்லும் சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் தங்களது பகுதியில் உடைந்த குடிநீர் குழாயை உடனே சீரமைத்து தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி கண்டன கோஷம் எழுப்பியபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசிய உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story