திருட்டு போன 101 செல்போன்கள் மீட்பு


திருட்டு போன 101 செல்போன்கள் மீட்பு
x
தினத்தந்தி 3 Sep 2021 5:57 PM GMT (Updated: 3 Sep 2021 5:57 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் திருட்டு போன ரூ.14 லட்சம் மதிப்பிலான 101 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஒப்படைத்தார்.

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் திருட்டு போன ரூ.14 லட்சம் மதிப்பிலான 101 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஒப்படைத்தார்.
புகார்கள் 
திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் திருட்டு மற்றும் காணாமல் போனது தொடர்பாக கடந்த 2020-21-ம் ஆண்டில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்பட போலீஸ் நிலையங்களில் புகார்கள் பெறப்பட்டன. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்படி செல்போன் திருட்டு குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் போலீசார் திருட்டு போன செல்போன்களை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
101 செல்போன்கள் மீட்பு
இதில் திருட்டு மற்றும் காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மீட்கப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்பிலான 101 செல்போன்களை அதன் உரிமையாளர்களை நேரில் அழைத்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஒப்படைத்தார். மேலும் துரிதமாக விசாரணை நடத்தி செல்போன்களை மீட்ட சைபர் கிரைம் போலீசாரை பாராட்டினார். செல்போன்களை பெற்று கொண்ட உரிமையாளர்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
உரிய கவனம் செலுத்த வேண்டும்
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறுகையில், 
அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி திருட்டு, காணாமல் போன செல்போன்கள் குறித்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள புகார்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது உடமைகளை பாதுகாப்பதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Next Story