பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் குழு ஆய்வு


பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் குழு ஆய்வு
x
தினத்தந்தி 3 Sep 2021 8:41 PM GMT (Updated: 3 Sep 2021 8:41 PM GMT)

ஆசிய உள்கட்டமைப்பு நிதி ரூ.1,036 கோடியில் புனரமைக்கப்பட்ட கல்லணைக்கால்வாயின் தரம் குறித்து பொதுப்பணித்துறையின் உயர் அதிகாரிகள் கொண்ட ஆய்வு குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர்;
ஆசிய உள்கட்டமைப்பு நிதி ரூ.1,036 கோடியில் புனரமைக்கப்பட்ட கல்லணைக்கால்வாயின் தரம் குறித்து பொதுப்பணித்துறையின் உயர் அதிகாரிகள் கொண்ட ஆய்வு குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
கல்லணைக்கால்வாய்
ஈரோடு மாவட்டம் நசியனூர் கண்ணவேலம்பாளையம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் தரைதளம் கட்டப்பட்ட இடத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்டப்பட்ட வீடுகள் தரமில்லை என 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானங்கள், நீர் ஆதார புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறையின் உயர் அதிகாரிகளை கொண்ட குழுவை தமிழகஅரசு அமைத்தது. தஞ்சை மாவட்டம் கல்லணைக் கால்வாய் ஆற்றினை புனரமைக்க ஆசிய உள் கட்டமைப்பு நிதி ரூ.1,036 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்ட பணிகள் 5 தொகுப்புகளாக நடைபெற்றது.
விவசாயிகள் புகார்
இதில் ஒரு தொகுப்பினை கல்லணைக்கால்வாய் ஆற்றில், புதுப்பட்டினம் முதல் ஈச்சங்கோட்டை வரை சென்னை புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பை கட்டிய கட்டுமான நிறுவனம் ஒன்று எடுத்து புனரமைத்துள்ளது.
சென்னையில் தரமில்லாமல் கட்டியதை போல், கல்லணைக்கால்வாய் ஆற்றிலும் புனரமைப்பு பணிகளில் தரமில்லை எனவும், கல்லணைக் கால்வாய் ஆற்றில் தரை பகுதி மற்றும் இருபுறமும் சிமெண்டு கான்கிரீட்டை கொண்டு சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் பூமிக்குள் இறங்காமல் நீர் கசிவு இல்லாமல், கால்வாய் அருகே உள்ள கிணறுகளுக்கு கூட தண்ணீர் ஊற்றெடுக்காமல் உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
ஆய்வு
இந்தநிலையில் பொதுப்பணித்துறையின் ஆய்வுக்குழுவை சேர்ந்த செயற்பொறியாளர் ஸ்ரீதர் ஆதித்தியா, உதவி செயற்பொறியாளர் ஜாகீர் உசேன், உதவி பொறியாளர்கள் சரவணன், சீனிவாசன் ஆகியோர் கல்லணைக் கால்வாயில் தஞ்சையை அடுத்த ஈச்சங்கோட்டையில் கல்யாண ஓடை பிரியும் இடங்களில் ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன் மற்றும் விவசாயிகள் சிலர், ஆய்வுக்குழுவினரை சந்தித்து மனு அளித்தனர். அதில், கல்லணைக்கால்வாயில் நடைபெறும் பணிகள் முழுமையான திட்டமதிப்பிட்டோடு நடைபெற வேண்டும். தண்ணீர் தேங்குவதற்கான தடுப்புகள் ஏற்கனவே எந்தெந்த இடங்களில் இருந்ததோ அந்த இடங்களில் தடுப்புகள் அமைத்து தர வேண்டும். ஆற்றின் 2 புறமும் போடப்பட்டுள்ள கான்கிரீட்டில் சில இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் நிறுத்தப்பட்டவுடன் அந்த இடத்தில் உள்ள புதிதாக கான்கிரீட் போட வேண்டும். சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானம் தரமற்றதாக உள்ளதாக செய்திகள் வரும் நிலையில், இந்த பணிகளை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்திட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக ஆய்வுக்குழுவினர் உறுதி அளித்தனர்.

Next Story