அரபிக்கடலில் படகு மூழ்கியது; 6 மீனவர்கள் பத்திரமாக மீட்பு


அரபிக்கடலில் படகு மூழ்கியது; 6 மீனவர்கள் பத்திரமாக மீட்பு
x
தினத்தந்தி 3 Sep 2021 8:51 PM GMT (Updated: 3 Sep 2021 8:51 PM GMT)

ஒன்னாவர் அருகே அரபிக்கடலில் படகு மூழ்கியது. இதனால் நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கார்வார்:

மீன்பிடிக்க சென்றனர்

  உத்தர கன்னடா மாவட்டம் ஒன்னாவரை சேர்ந்தவர்கள் சிவராம், ஸ்ரேயான். மீனவர்கள். இந்த நிலையில் நேற்று சிவராம், ஸ்ரேயான் உள்பட 6 மீனவர்கள் ஒன்னாவரில் காசர்கோடு எல்லைப்பகுதியை ஒட்டிய டோம்கார் பகுதியில் உள்ள கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

  அவர்கள், ஒன்னாவரை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ண பண்டாரி என்பவரின் விசைப்படகில் நடுகடலுக்குள் சென்று வலையை வீசி மீன்பிடித்து கொண்டிருந்தனர். வலையில் பிடிபட்ட மீன்களை, படகில் வைத்து இருந்தனர்.

நடுக்கடலில் படகு மூழ்கியது

  இந்த சந்தர்ப்பத்தில் விசைப்படகின் என்ஜீன் பழுதாகியுள்ளது. இதனால் நடுக்கடலில் படகு நின்றுவிட்டது. இந்த நேரத்தில் கடல் அலை சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் புகுந்து படகு மூழ்கியது.

  இதனால் படகில் இருந்த 6 மீனவர்களும் கடலில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் ஒரு படகில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

6 மீனவர்கள் மீட்பு

  பின்னர் கடலில் தத்தளித்த சிவராம், ஸ்ரேயான் உள்பட 6 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு காப்பாற்றி கரைபகுதிக்கு கொண்டு வந்தனர். ஆனாலும் படகு கடலில் முழுவதுமாக மூழ்கிவிட்டது.

  இதனால் படகுடன் அதில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்கள், மீன்பிடிக்க தேவையான பொருட்கள் நீரில் மூழ்கி விட்டன. இதுகுறித்து ஒன்னாவர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story