மினிலாரி கவிழ்ந்து சாலையில் கொட்டிய பழங்கள்


மினிலாரி கவிழ்ந்து சாலையில் கொட்டிய பழங்கள்
x
தினத்தந்தி 4 Sep 2021 1:50 PM GMT (Updated: 4 Sep 2021 1:50 PM GMT)

கோவில்பட்டி அருகே மினிலாரி கவிழ்ந்து சாலையில் கொட்டிய பழங்களை பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளி சென்றனர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மினிலாரி கவிழ்ந்து சாலையில் கொட்டிய பழங்களை பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளி சென்றனர்.

மினி லாரி கவிழ்ந்தது

மதுரையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பழங்கள் லோடு ஏற்றிய மினி லாரி நேற்று முன்தினம் இரவில் புறப்பட்டு சென்றது. நேற்று அதிகாலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூர்- இடைசெவல் இடையே சென்றபோது, எதிர்பாராதவிதமாக மினிலாரி சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மினலாரி டிரைவரும், கிளீனரும் லேசான காயமடைந்தனர். மேலும் மினிலாரியில் ஏராளமான கூடைகளில் இருந்த ஆப்பிள், திராட்சை, பப்பாளி உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான பழங்கள் சாலையோரமாக கொட்டி குவிந்து கிடந்தன.

போட்டி போட்டு அள்ளிய மக்கள்

சேதமடைந்த பழங்களை மினிலாரியில் மீண்டும் கொண்டு செல்ல உரிமையாளர் விரும்பவில்லை.
எனவே, சாலையோரம் குவிந்து கிடந்த பழங்களை அப்பகுதி பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளிச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story