ஆன்லைனில் பரிசு தருவதாக ரூ.92 ஆயிரம் மோசடி


ஆன்லைனில் பரிசு தருவதாக ரூ.92 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 4 Sep 2021 4:42 PM GMT (Updated: 4 Sep 2021 4:42 PM GMT)

ராமநாதபுரம் அருகே வாலிபரிடம் ஆன்லைனில் பரிசு தருவதாக ரூ.92 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே வாலிபரிடம் ஆன்லைனில் பரிசு தருவதாக ரூ.92 ஆயிரம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பரிசு
கடலாடி அருகே உள்ள ஓரிவயல் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவ சண்முகம். இவரது மகன் விக்னேஷ் குமார் (வயது 23). இவர் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மூலம் நாடித்துடிப்பு ஆக்சிஜன் அளவு கண்டறியும் கருவியை கடந்த மாதம் வாங்கினார். அதன் பின்னர் அவருக்கு ரூ.9.30 லட்சம் பரிசு விழுந்ததாக தபால் வந்தது. பரிசு பெறவேண்டும் என்றால் ரூ.9ஆயிரத்து 300 கமிஷன் தொகை செலுத்த வேண்டும் என வாட்ஸ் ஆப் மூலம் தகவல் வந்தது. 
இதன்படி விக்னேஷ் குமார் அனுப்பியபணம் முடக்கப் பட்டதாக தகவல் தெரிவித்து அதை விடுவிக்க, கணக்கை செயல்பாட்டுக்கு மீண்டும் கொண்டு வர மேலும் ரூ.27 ஆயிரத்து 900 அனுப்ப வேண்டும் வாட்ஸ் ஆப் மூலம் தகவல் வந்தது. இந்த பணத்தையும் செலுத்திய நிலையில் வங்கி பண பரிவர்த்தனையில் நிலுவை தொகை இருப்பதாக ரூ.49ஆயிரத்து 800 அனுப்புமாறு கேட்டு தகவல் வந்துள்ளது. மேலும் பணம்கேட்பதால் விட்ட பணத்தை மீட்கும் நோக்கில் அவர்கள் கேட்டு கொண்டதின்பேரில் ரூ.5 ஆயிரத்து 550-ஐ கடைசியாக அனுப்பினார்.
புகார் 
இவ்வாறு பல்வேறு தவணைகளில் ரூ.92 ஆயிரத்து 220 பெற்றுக் கொண்ட மோசடி கும்பல் அதன்பின்னர் தொடர்பின்றி இருந்துவிட்டனர். இதனால் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த விக்னேஷ் குமார் இழந்த பணம் ரூ.92 ஆயிரத்து 220-ஐ மீட்டுத்தரக்கோரி ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story