தனியார் பள்ளியை சூறையாடிய மர்ம கும்பல்


தனியார் பள்ளியை சூறையாடிய மர்ம கும்பல்
x
தினத்தந்தி 5 Sep 2021 6:23 PM GMT (Updated: 5 Sep 2021 6:23 PM GMT)

கூடலூரில் தனியார் பள்ளியை சூறையாடிய மர்ம கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூர்

கூடலூரில் தனியார் பள்ளியை சூறையாடிய மர்ம கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் பள்ளி

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள 1-ம் மைல் பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக பள்ளி மூடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பிற வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

போலீசில் புகார்

இதையொட்டி அந்த பள்ளியை சுத்தம் செய்யும் பணியை தொடங்க சில தொழிலாளர்கள் சென்றனர். அப்போது பள்ளி கட்டிடத்தில் சிமெண்டு சீட்டால் வேயப்பட்ட பின்பக்க மேற்கூரைகள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் மேசை, நாற்காலிகள் தூக்கி வீசி சேதப்படுத்தப்பட்டு கிடந்தது. உடனே பள்ளி நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் பள்ளி நிர்வாகம் சார்பில் நடராஜ் என்பவர் கூடலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பள்ளியை சூறையாடிய மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story