கஞ்சா வியாபாரி கொலை வழக்கில் சிறையில் உள்ள 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது


கஞ்சா வியாபாரி கொலை வழக்கில் சிறையில் உள்ள 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 6 Sep 2021 8:13 PM GMT (Updated: 6 Sep 2021 8:13 PM GMT)

திருச்சியில் கஞ்சா வியாபாரி கொலை வழக்கில் சிறையில் உள்ள 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி
திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள காட்டுப் பகுதியில் கஞ்சா வியாபாரி அருண்குமார் என்பவர் கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பிரேம்கண்ணன் (வயது 21) மற்றும் ஜாகீர் உசேன் (21) ஆகிய இருவரும் அருண்குமாரை செல்போனில் அழைத்து பிரச்சினை செய்ததுடன் கொடூர ஆயுதங்களால் கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் கஞ்சா விற்பது தொடர்பாக அருண்குமாருக்கும், அவர்களுக்கும் பிரச்சினை இருந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
குண்டர் சட்டத்தில் கைது
இதைத்தொடர்ந்து பிரேம் கண்ணன், ஜாகீர் உசேன் ஆகியோரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், கொலை, கஞ்சா விற்ற வழக்குகள் இருப்பதாலும், அவர்கள் வெளியே வந்தால் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது என்பதால் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனருக்கு ஏர்போர்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி பரிந்துரை செய்தார். அதன்பேரில் பிரேம்கண்ணன், ஜாகீர்உசேன் ஆகியோரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். இதைத்தொடா்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள இருவரிடமும் அதற்கான நகல் நேற்று வழங்கப்பட்டது.


Next Story