முகநூலில் வீடியோவில் பேசியபடியே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


முகநூலில் வீடியோவில் பேசியபடியே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 Sep 2021 9:30 PM GMT (Updated: 8 Sep 2021 9:30 PM GMT)

ராய்ச்சூர் அருகே முகநூலில் வீடியோவில் பேசியபடியே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் மீது அவர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

ராய்ச்சூர்: ராய்ச்சூர் அருகே முகநூலில் வீடியோவில் பேசியபடியே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் மீது அவர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெற்றோருடன் காதல் மனைவி

ராய்ச்சூர் மாவட்டம் எடபனூரு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கானதால் கிராமத்தை சேர்ந்தவர் பீமேஷ் நாயக் (வயது 27). இவர், அதே கிராமத்தை சேர்ந்த சாந்தா என்ற இளம்பெண்ணை காதலித்தார். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் பீமேஷ் நாயக், சாந்தாவின் காதலுக்கு 2 பேரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் வீட்டுக்கு தெரியாமல் பீமேஷ் நாயக்கும், சாந்தாவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

இதுபற்றி சாந்தாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதுபற்றி எடபனூரு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, பீமேஷ் நாயக், சாந்தாவை அழைத்து எடபனூரு போலீசார் சமாதானமாக பேசினார்கள். பின்னர் சாந்தாவை, அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சாந்தாவை தான் திருமணம் செய்திருப்பதால், தன்னுடன் அனுப்பி வைக்கும்படி பீமேஷ் நாயக் கேட்டும், போலீசார் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

வாலிபர் தற்கொலை

இதன் காரணமாக மனம் உடைந்த பீமேஷ் நாயக் நேற்று முகநூல் வீடியோவில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேசினார். பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் எடபனூரு போலீசார் விரைந்து சென்று பீமேஷ் நாயக் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதமும் போலீசாருக்கு கிடைத்தது.

அதில், வேறு சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால், தன்னுடன் சேர்ந்து வாழ வைக்காமல் காதலியை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்து விட்டதாக அவர் குற்றச்சாட்டு கூறி இருந்தார். இதுகுறித்து எடபனூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் எடபனூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story