குலசேகரன்பட்டினம் அருகே ஊஞ்சல் விளையாடிய சிறுமி திடீரென சேலை கழுத்தை இறுக்கி பலி


குலசேகரன்பட்டினம் அருகே  ஊஞ்சல் விளையாடிய சிறுமி திடீரென  சேலை கழுத்தை இறுக்கி பலி
x
தினத்தந்தி 9 Sep 2021 12:55 PM GMT (Updated: 9 Sep 2021 12:55 PM GMT)

குலசேகரன்பட்டினம் அருகே ஊஞ்சல் விளையாடிய சிறுமி திடீரென சேலை கழுத்தை இறுக்கி பலியானார்.

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் அருகே ஊஞ்சல் விளையாடிய சிறுமி திடீரென சேலை கழுத்தை இறுக்கி பலியானார்.
கோவில் கொடைவிழா
குலசேகரன்பட்டினம் அருகே உள்ள புது குடியேற்று தெருவை சேர்ந்த தவசுமணி மகன் மயில்வாகனன் (வயது 47). ஈரோட்டில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திவ்யஸ்ரீ என்ற மகளும் சதீஷ், மனோஜ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவரது மகள் திவ்யஸ்ரீக்கு (12) ஈரோட்டில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் குலசேகரன்பட்டினம் புதுக்குடியேற்று தெருவில் உள்ள கோவில் கொடைவிழாவிற்கு குடும்பத்துடன் மயில்வாகனன் வந்துள்ளார். 
ஊஞ்சல் விளையாடியபோது...
விழா முடிந்து நேற்று ஊருக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருக்கும்போது திவ்யஸ்ரீ ஊஞ்சலில் ஆடி விட்டு வருகிறேன் என்று கூறி சென்றுள்ளார். வீட்டின் பின்னால் உள்ள வேப்பமரத்தில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திவ்யஸ்ரீ கழுத்தில் ஊஞ்சல் சேலை இறுகி தொங்குவதை பார்த்த தாய் அனிதா அலறியுள்ளார். பதறிப்போன மயில்வாகனன் ஓடிச்சென்று மகளின் கழுத்தில் இருந்த ஊஞ்சலை தளர்த்தி பார்த்தபோது திவ்யஸ்ரீ சுய நினைவு இல்லாமல் இருந்துள்ளார். உடனடியாக அவரை திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து போனதாக தெரிவித்தனர். 
போலீசார் விசாரணை
இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story