பெண் உள்பட 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை


பெண் உள்பட 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை
x
தினத்தந்தி 9 Sep 2021 5:05 PM GMT (Updated: 9 Sep 2021 5:10 PM GMT)

நில பிரச்சனையால் தொழிலாளியை கொல்ல முயன்ற பெண் உள்பட 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஊட்டி,

நில பிரச்சனையால் தொழிலாளியை கொல்ல முயன்ற பெண் உள்பட 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கத்தியால் வெட்டினர்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள நொண்டிமேடு பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவருடைய மனைவி விசாலாட்சி(வயது 49). இவர்களுக்கு ரஞ்சித்(30), உதயகுமார்(28) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கும், அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான வினோத்(27) என்பவருக்கும் இடையே நில பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 6.11.2018 அன்று அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த விசாலாட்சி, அவரது மகன்கள் ரஞ்சித், உதயகுமார் ஆகியோர் வினோத்தை கத்தியால் வெட்டினர்.

கைது

இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையில் பூரண குணம் அடைந்து வீடு திரும்பினார். 

இதுகுறித்து வினோத் அளித்த புகாரின் பேரில் ஊட்டி நகர மத்திய போலீசார் பெண் உள்பட 3 பேர் மீது கொலை முயற்சி உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

4 ஆண்டுகள் சிறை

அதில், நில பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளியை கொலை செய்ய முயற்சித்த விசாலாட்சி, அவரது மகன்கள் உதயகுமார், ரஞ்சித் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார். 

மேலும் ரஞ்சித்துக்கு ரூ.2,500, விசாலாட்சி மற்றும் உதயகுமாருக்கு தலா ரூ.2,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். பின்னர் 3 பேரையும் போலீசார் கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர்.


Next Story