குடியாத்தம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை


குடியாத்தம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 9 Sep 2021 6:27 PM GMT (Updated: 9 Sep 2021 6:27 PM GMT)

குடியாத்தம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

குடியாத்தம்

குடியாத்தம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

உடல்கருகி சாவு

குடியாத்தத்தை அடுத்த நெல்லூர்பேட்டை ஊராட்சி லிங்குன்றம் ஜாப்ராபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 40), கட்டிட மேஸ்திரி. இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா பகுதியைச் சேர்ந்த பிரியா (38) என்பவருக்கும் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். விஜயன் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். 

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் விஜயன் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் மனமுடைந்த பிரியா இரவு 10.30 மணியளவில் தனது வீட்டின் பக்கத்தில் உள்ள காலியிடத்தில் மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். சிறிது நேரத்தில் பிரியா உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

சாவில் சந்தேகம்

தகவல் அறிந்ததும் பிரியாவின் உறவினர்கள் நேற்று அதிகாலை குடியாத்தம் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று அதிகாலையே சம்பவ இடத்துக்கு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பிரியாவின் பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரியாவின் அண்ணன் சுரேஷ் தனது தங்கையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடியாத்தம் டவுன் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அவரது கணவர் விஜயனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story