குமரியில் கல்லூரி மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா


குமரியில் கல்லூரி மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 Sep 2021 9:17 PM GMT (Updated: 9 Sep 2021 9:17 PM GMT)

குமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பள்ளிக்கூடத்தில் 3 மாணவர்களுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

 நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பள்ளிக்கூடத்தில் 3 மாணவர்களுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு
கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. இந்தநிலையில் கொரோனா ெதாற்று படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி குமரி மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருகின்றார்கள். கல்லூரியை பொறுத்தவரை முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர மற்ற மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு வருகின்றனர்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
14 மாணவர்களுக்கு கொரோனா
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள 2 கல்லூரிகளில் படிக்கும்  6 மாணவ-மாணவிகளுக்கு நேற்றைய பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடனே அந்த மாணவ, மாணவிகள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  
இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுடன் தொடர்பில் இருந்த 262 பேருக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை நடத்தினர். 
பள்ளி மாணவர்களுக்கும்...
ஏற்கனவே குமரி மாவட்டத்தில் ரீத்தாபுரம் மற்றும் முன்சிறை அரசு பள்ளிகளில் தலா ஒரு மாணவர்கள் வீதம் 2 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 
இந்தநிலையில் நாகர்கோவில் டதி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவருடைய தாயாருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. மேலும், மாணவியின் எதிர் வீட்டில் வசித்து வரும் ஒரு சிறுவனுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட 3 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
அதேபோல குலசேகரம் பகுதியில் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒரு  மாணவர், ஒரு மாணவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்களுக்கும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிருமிநாசினி தெளிப்பு
அது மட்டுமின்றி மாணவி வசித்து வரும் பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. அந்த பகுதியில் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் நடந்தன.

Next Story