நகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள தாரமங்கலத்துடன் ஆரூர்பட்டியை இணைக்க எதிர்ப்பு; ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


நகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள  தாரமங்கலத்துடன் ஆரூர்பட்டியை இணைக்க எதிர்ப்பு;  ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 9 Sep 2021 9:58 PM GMT (Updated: 9 Sep 2021 9:58 PM GMT)

நகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள தாரமங்கலத்துடன் ஆரூர்பட்டி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து ஊராட்சி மன்ற கூட்டம் கூட்டப்பட்டு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தாரமங்கலம்,
கருத்து கேட்பு கூட்டம்
தாரமங்கலம் மற்றும் இடங்கணசாலை பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்தும் அறிவிப்பை தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து நகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக தாரமங்கலம், இடங்கணசாலை சுற்றுவட்டார பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டமும் தாரமங்கலத்தில் கலெக்டர் தலைமையில் கடந்த 7-ந் தேதி நடந்தது.
 இந்த கூட்டத்தில், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குறுக்குப்பட்டி, துட்டம்பட்டி, ஆரூர்பட்டி ஆகிய கிராமங்களை தாரமங்கலம் நகராட்சியுடன் இணைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை மாவட்ட கலெக்டரிடம் பதிவு செய்தனர்.
இணைக்க எதிர்ப்பு
இந்த நிலையில் ஆரூர்பட்டி கிராம பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் ஊராட்சி பகுதி முழுவதும் நகராட்சியுடன் இணைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையொட்டி நேற்று இந்த கிராமத்தை சேர்ந்த அனைத்து வார்டு பகுதி பொதுமக்களும் ஆரூர்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் வீரம்மாள் காங்கேயனிடம், தங்கள் ஊராட்சி பகுதி முழுவதும் தாரமங்கலம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டனர். நேரம் அதிகரிக்க, அதிகரிக்க மக்கள் கூட்டம் கூடியது. இதனால் பாதுகாப்பு கருதி தாரமங்கலம் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
ஊராட்சியில் தீர்மானம்
ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஊராட்சி மன்ற கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று வலியுறுத்திய பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்திற்கு இடையே ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் ஆரூர்பட்டி ஊராட்சியை தாரமங்கலம் நகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story