இன்ஸ்பெக்டரை பணிநீக்கம் செய்யக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


இன்ஸ்பெக்டரை பணிநீக்கம் செய்யக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Sep 2021 6:13 PM GMT (Updated: 10 Sep 2021 6:13 PM GMT)

கரூரில் விநாயகர் சிலை சேதம் அடைந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டரை பணிநீக்கம் செய்யக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்
விநாயகர் சிலை சேதம்
விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இந்துமுன்னணி சார்பில் கரூர் வ.உ.சி. தெரு பகுதியில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் கரூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த சிலையை  எடுக்க முயன்றபோது இந்து முன்னணியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது விநாயகர் சிலையின் துதிக்கை ஒரு பகுதி சேதம் அடைந்தது. 
இதனை கண்டித்தும், கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், ஊர்வலமாக சென்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிடப்படும் என பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டது. 
ஆர்ப்பாட்டம்
இதையடுத்து நேற்று காலை கோவை-ஈரோடு ரோட்டில் மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில் பா.ஜ.க.வினர் திரண்டனர். பின்னர் உடைந்த விநாயகர் சிலை படத்தை கையில் ஏந்தி கொண்டு தமிழக அரசை கண்டித்தும், சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை பணீநீக்கம் செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராதகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ், கோட்டாச்சியர் பாலசுப்பிரமணியன், தாசில்தார் சக்திவேல் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story