திருச்செங்கோட்டில் டிராக்டர் மோதி சிறுமி பலி-பேராசிரியர் உள்பட 2 பேர் காயம்


திருச்செங்கோட்டில் டிராக்டர் மோதி சிறுமி பலி-பேராசிரியர் உள்பட 2 பேர் காயம்
x
தினத்தந்தி 10 Sep 2021 6:38 PM GMT (Updated: 10 Sep 2021 6:38 PM GMT)

திருச்செங்கோட்டில் டிராக்டர் மோதி சிறுமி பலியானாள். பேராசிரியர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

எலச்சிப்பாளையம்:
டிராக்டர் மோதியது
திருச்செங்கோடு சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 31). இவர் வேலூர் வி.ஐ.டி. கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய அக்காள் மகள் ஈரோடு சோலார்புதூரை சேர்ந்த பிருத்விகா (3). இந்தநிலையில் பார்த்திபன் நேற்று தனது தாய் பரிமளா தேவி, அக்காள் மகள் பிருத்விகாவுடன் மொபட்டில் திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த டிராக்டர் மொபட் மீது மோதியது. இதில் சிறுமி பிருத்விகா படுகாயமடைந்தாள். பார்த்திபன், பரிமளா தேவி ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 
சிறுமி பலி
பின்னர் சிறுமி பிருத்விகா மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு அவளை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு டவுன் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிறுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் விபத்தை ஏற்படுத்தியதாக சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (54) என்பவரை கைது செய்தனர். டிராக்டர் மோதி் சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story