மேலும் 50 ஆயிரத்து 350 டோஸ் தடுப்பூசி வந்துள்ளது


மேலும் 50 ஆயிரத்து 350 டோஸ் தடுப்பூசி வந்துள்ளது
x
தினத்தந்தி 10 Sep 2021 10:31 PM GMT (Updated: 10 Sep 2021 10:31 PM GMT)

திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் 50 ஆயிரத்து 350 டோஸ் தடுப்பூசி வந்துள்ளது. இந்த தடுப்பூசி பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்திற்கு மேலும் 50 ஆயிரத்து 350 டோஸ் தடுப்பூசி வந்துள்ளது. இந்த தடுப்பூசி பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 
கொரோனா தடுப்பூசி 
கொரோனா பரவலை தடுக்க திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதியில் இருந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி கொண்டுவரப்பட்டது. 
இந்நிலையில் முதலில் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டிய பொதுமக்கள், இதன் பின்னர் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வால் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை எட்ட உள்ளது. 
50 ஆயிரத்து 350 டோஸ் வருகை 
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருவதால், தேவைக்கு ஏற்ப தடுப்பூசிகள் கேட்டு பெறப்பட்டு தொழிலாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று திருப்பூருக்கு மேலும் 50 ஆயிரத்து 350 டோஸ் தடுப்பூசி வந்தது. 
இதில் கோவிஷீல்டு தடுப்பூசி 42 ஆயிரத்து 500 டோசும், கோவேக்சின் தடுப்பூசி 7 ஆயிரத்து 850 டோசும் அடங்கும். இந்த தடுப்பூசிகள் மாவட்டந்தோறும் தடுப்பூசி போடும் பகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நேற்று தீவிரமாக நடந்தது. இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story