ஆடுகள் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை


ஆடுகள் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 10 Sep 2021 10:49 PM GMT (Updated: 10 Sep 2021 10:49 PM GMT)

கன்னிவாடி ஆட்டு சந்தையில் ஆடுகள் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மூலனூர்
கன்னிவாடி ஆட்டு சந்தையில் ஆடுகள் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆடுகள் வரத்து அதிகரிப்பு 
தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை ஆகும். இந்த சந்தை வாரந்தோறும் பிரதி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெருநகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கன்னிவாடி ஆட்டு  சந்தையில் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர். 
இதுபோல் கன்னிவாடி மற்றும் மூலனூர் வெள்ளகோவில் பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இந்த வாரம் ஆடுகள் வரத்து அதிக அளவில் இருந்தது. 
விலை சரிவு  
இதனால் விவசாயிகள் ஆடுகளை அதிக அளவில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டினர். ஆனால் சந்தையில் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததால், ஆடுகளை திருப்பி கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. ஆடுகள் வரத்து அதிகமானதால் ஆடுகளின் விலை சரிவை சந்தித்தது. கடந்த வாரம் 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் அதே ஆடு ரூ.4 ஆயிரத்திற்கு விற்பனையானது. இந்த வாரம் ஆடுகளின் வரத்து அதிகமானதால் விலை வெகுவாக குறைந்தது என விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்த சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படும். அதனடிப்படையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது இந்த வாரத்தில் ரூ.100 குறைந்து, ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு சுமார் ரூ.4 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.

Next Story