திருவள்ளூர் மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கு நாளை கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கு நாளை கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 Sep 2021 12:29 AM GMT (Updated: 11 Sep 2021 12:29 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவராக வக்கீல் தில்லைகுமார் உள்ளார். இவரது முயற்சியின் பேரில் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதனைதொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் முனுசாமி, வார்டு கவுன்சிலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் தில்லை குமார் தலைமை தாங்கினார்.

மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், வார்டு கவுன்சிலர்களுக்கு பாராட்டு தெரிவித்து சான்றுகள் வழங்கினர்.

மெகா தடுப்பூசி முகாம்

இதனையடுத்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பேசியதாவது:- மாவட்டம் முழுவதும் இதுவரை 46 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இது போதாது. நமது இலக்கு 100 சதவீதம் இருக்க வேண்டும். வருகிற 12-ந் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் மாநிலம் முழுவதும் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்கு மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு அவசியம். பேரிட்டிவாக்கம் ஊராட்சி போல் அனைத்து ஊராட்சிகளிலும் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதற்கு பின்னர் சுமார் 500 பேர் கலந்து கொண்ட மோட்டார் சைக்கிள் பேரணி தொடங்கியது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜவஹர்லால் ஆகியோர் மோட்டார் சைக்கிளை செலுத்தினர். மோட்டார் சைக்கிள் பேரணி 25 கிலோமீட்டர் தொடர்ந்து சென்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது. வழிநெடுகிலும் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களை சந்தித்து கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், அடிக்கடி சோப்புகளை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவித்தார். இதில் பூண்டி ஒன்றிய குழு துணைத்தலைவர் மகாலட்சுமி மோதிலால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story