திருமுல்லைவாயலில் சோகம்: முதலிரவில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை - புதுமணப்பெண் அதிர்ச்சி


திருமுல்லைவாயலில் சோகம்: முதலிரவில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை - புதுமணப்பெண் அதிர்ச்சி
x
தினத்தந்தி 11 Sep 2021 8:46 AM GMT (Updated: 11 Sep 2021 8:46 AM GMT)

முதலிரவில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு புதுமணப்பெண் அதிர்ச்சி அடைந்தார்.

ஆவடி,

மதுராந்தகம் அடுத்த பாலங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 31). இவர், கதிர் அறுக்கும் வாகனத்தை இயக்கும் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.இவருக்கும், திருமுல்லைவாயல் எஸ்.வி.டி. நகரில் வசிக்கும் இவருடைய அத்தை மகள் நந்தினி (24) என்பவருக்கும் நேற்று முன்தினம் செங்கல்பட்டு பகுதியில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த பிறகு இரவில் திருமுல்லைவாயலில் உள்ள நந்தினியின் வீட்டுக்கு மணமக்கள் இருவரும் உறவினர்களுடன் வந்தனர். நேற்றுமுன்தினம் இரவு கார்த்திகேயன்-நந்தினிக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர்.

புதுமண தம்பதிகள் இரவில் நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்தனர். அதிகாலை 3 மணியளவில் நந்தினி தூங்கிவிட்டார்.

நேற்று அதிகாலை 6 மணியளவில் நந்தினி எழுந்து பார்த்தபோது, தனது கணவர் கார்த்திகேயன் வீட்டு கூரையில் உள்ள இரும்பு குழாயில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கணவரின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார். நந்தினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், கார்த்திகேயன் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார், தூக்கில் தொங்கிய கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுமாப்பிள்ளை கார்த்திகேயனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

திருமணத்துக்காக நேற்றுமுன்தினம் களைகட்டி இருந்த இவர்களது வீடு, நேற்று புதுமாப்பிள்ளை தற்கொலையால் சோகத்தில் மூழ்கியது.

Next Story