மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Sep 2021 5:36 PM GMT (Updated: 11 Sep 2021 5:36 PM GMT)

கீழையூர், திருமருகலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாங்கண்ணி:
கீழையூர், திருமருகலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தையும், தலைவர்களையும் கொடூரமாக தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டம் கீழையூரில் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார்.  நாகை மாலி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.  
இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் அப்துல்அஜிஸ், கிருஷ்ணன், வெங்கட்ராமன், விவசாய சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பால்சாமி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சுஜாதா, தலைவர் சுசிலா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
திருமருகல்
இதேபோல திருமருகல் பஸ்நிலையம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். .மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் பாபு,  விவசாய சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் பொன்மணி ஆகியோர் முன்னிலை வைத்தனர். 
திரிபுரா மாநிலத்தில் நடைபெறும் வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை அழைத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது.
பயிர் காப்பீட்டு தொகை
 கூட்டுறவு கடன் சங்கங்களில் 2019-20-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். விடுபட்ட அனைவருக்கும் பயிர் நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பாரதி, ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பாலு, ஒன்றிய தலைவர் பிரபாகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் சிங்காரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழ்வேளூர், சிக்கல்
 கீழ்வேளூரில், கீழ்வேளூர்- கச்சனம் சாலை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அபுபக்கர் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நாகை மாவட்ட செயலாளர் மாரிமுத்து பேசினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் சிவக்குமார், கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாண்டியன், துரைராஜ், மாரிமுத்து உள்பட  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். 
இதே போல சிக்கல் கடைத்தெருவில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நாகை ஒன்றிய செயலாளர் பகு தலைமை தாங்கினார். விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் பேசினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
வேதாரண்யம்
வேதாரண்யம் பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். மாவட்டக்குழுவை சேர்ந்த வெற்றியழகன் முன்னிலை வகித்தார். ஒன்றியக்குழு நடராஜன், தங்கராசு, இளையபெருமாள், பாண்டியன், நகர பொறுப்பாளர் சிக்கந்தர் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Next Story