வாலிபரை கத்தியால் கீறி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


வாலிபரை கத்தியால் கீறி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
x
தினத்தந்தி 11 Sep 2021 6:33 PM GMT (Updated: 11 Sep 2021 6:33 PM GMT)

காதல் பிரச்சினையால் ஏற்பட்ட தகராறு காரணமாக வாலிபரை கத்தியால் கீறி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

குளித்தலை, 
காதல் தகராறு
குளித்தலை பேராளம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 22). இவரது தங்கையை அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (22) என்பவர் காதலித்து வந்துள்ளார். இதுதொடர்பாக 2 குடும்பத்தாரிடையே தகராறு இருந்து வந்துள்ளது. 
இந்தநிலையில் குருமூர்த்தி மற்றும் அவரது சித்தப்பா மகன் லோகநாதன் ஆகியோர் நேற்று முன்தினம் அதே தெருவில் உள்ள அடி பைப்பில் கைகால் கழுவிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த சதீஷ்குமார் குருமூர்த்தி மற்றும் லோகநாதனை சிறிய கத்தியால் மூக்கு மற்றும் நெற்றிப்பகுதியில் கீறி காயப்படுத்தியுள்ளார். 
கொலை மிரட்டல்
மேலும் அங்கு வந்த சதீஷ்குமாரின் தாயார் கண்ணம்மா, உறவினர் ராமு ஆகியோர் குருமூர்த்தி மற்றும் லோகநாதனை தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
இது குறித்து குருமூர்த்தி அளித்த புகாரின்பேரில் சதீஷ்குமார், கண்ணம்மா, ராமு ஆகிய 3 பேர் மீதும் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Next Story