மனைவி, மாமியாரை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி, மாமியாரை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 11 Sep 2021 9:49 PM GMT (Updated: 11 Sep 2021 9:49 PM GMT)

மனைவி, மாமியாரை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி:

மனைவி-மாமியார் கொலை
திருச்சி பெரியமிளகுபாறை நாயக்கர்தெருவை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 34). இவர் தனது மனைவி பவித்ரா மற்றும் 2 வயது மகள் கனிஷ்காவுடன் வசித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பவித்ராவின் தாய் கலைச்செல்வி மகளை பார்ப்பதற்காக பெரியமிளகுபாறையில் உள்ள உலகநாதனின் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது குடும்பத்தகராறில் மனைவி பவித்ரா, மாமியார் கலைச்செல்வி ஆகியோரை உலகநாதன் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார்.
பின்னர் வீட்டை பூட்டிவிட்டு 2 வயது மகளை தூக்கிக்கொண்டு சென்று விட்டார். அக்கம், பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில், அங்கு சென்று செசன்ஸ்கோர்ட்டு போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து உலகநாதனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு திருச்சி உறையூர் அச்சடிக்காரத்தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தாய் இந்திராணியுடன் மாடி பகுதியில் உலகநாதன் தங்கி இருந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை 
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை இந்திராணி பெரம்பலூரில் உள்ள தனது மூத்த மகன் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த உலகநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன்தினம் மாலை இந்திராணி வீடு திரும்பினார். அப்போது வீட்டிற்குள் உலகநாதன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து உறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு சென்ற போலீசார், உலகநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடந்த சில மாதங்களாகவே உலகநாதன் மனவிரக்தியில் இருந்த வந்ததால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story