செங்கல்பட்டு மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு


செங்கல்பட்டு மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் சாவு
x
தினத்தந்தி 12 Sep 2021 1:25 PM GMT (Updated: 12 Sep 2021 1:25 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகாவை சேர்ந்தவர் சுசீலா (வயது 57), தனது கணவருடன் செய்யூரில் இருந்து மறைமலைநகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மறைமலைநகர் தனியார் தொழிற்சாலை அருகே செல்லும்போது பின்னால் வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சுசீலா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் சண்முகம் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகா (47), இவர் நேற்று முன்தினம் படப்பையில் நடைபெற்ற உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் தனது உறவினரின் மோட்டார் சைக்கிளில் தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். மண்ணிவாக்கம் அருகே வரும்போது சாலையில் இருந்த வேகத்தடை மீது மோட்டார் சைக்கிளில் ஏறி இறங்கியது. இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த ரேணுகா தவறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்‌. அங்கு டாக்டர் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஒரு விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கடப்பேரியை சேர்ந்தவர் ரசூல் பீவி (39). கணவரை பிரிந்து விவாகரத்து பெற்று தனியாக கடப்பேரியில் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர் நேற்று காலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தார்.அப்போது மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் அவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவ்வாறு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், ரசூல் பீவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பஸ் டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story