பெங்களூருவில் கால்பந்து மைதானத்திற்குள் புகுந்து ரவுடி வெட்டிக்கொலை


பெங்களூருவில் கால்பந்து மைதானத்திற்குள் புகுந்து ரவுடி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 12 Sep 2021 8:47 PM GMT (Updated: 12 Sep 2021 8:47 PM GMT)

பெங்களூருவில் கால்பந்து மைதானத்திற்குள் புகுந்து ரவுடியை வெட்டிக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

ரவுடி

  பெங்களூரு புலிகேசிநகர் அருகே வசித்து வந்தவர் அரவிந்த் என்ற லீ (வயது 30). இவர் ரவுடி ஆவார். கால்பந்து விளையாடுவதிலும் அரவிந்த் ஆர்வமாக இருந்து வந்தார். பெங்களூரு அசோக்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாந்தலாநகர் பகுதியில் உள்ள கர்நாடக கால்பந்து மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள அரவிந்த் தனது நண்பர்களுடன் வந்திருந்தார்.

  கால்பந்து விளையாடி விட்டு மாலை 4 மணியளவில் நண்பர்கள் ஜூஸ் குடிப்பதற்காக மைதானம் அருகே உள்ள கடைக்கு அரவிந்த் வந்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், அரவிந்தை கொலை செய்ய ஆயுதங்களுடன் வந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தனது உயிரை காப்பாற்றி கொள்ள மைதானத்திற்குள் ஓடினார். ஆனாலும் மர்மநபர்கள் அவரை விடாமல் விரட்டி சென்றார்கள்.

மைதானத்திற்குள் புகுந்து கொலை

  இதனால் மைதானத்திற்குள் உள்ள ஒரு அறைக்குள் சென்று உட்புறமாக அரவிந்த் கதவை பூட்டி கொண்டார். ஆனாலும் மர்மநபர்கள் விடாமல் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அரவிந்தை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினார்கள். இதில், பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். உடனே அங்கிருந்து மர்மநபர்கள் ஓடிவிட்டனர்.

  தகவல் அறிந்ததும் அசோக்நகர் போலீசார் விரைந்துவந்து அரவிந்த் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் அனுஜித்தும் கால்பந்து மைதானத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.

2 தனிப்படை அமைப்பு

  அப்போது அரவிந்த் பெயர் பாரதிநகர் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றிருப்பது தெரியவந்தது. அவரை 4 முதல் 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்திருப்பதும் தெரிந்தது. அரவிந்த் ரவுடி என்பதால் முன்விரோதம் காரணமாக எதிர்கோஷ்டியை சேர்ந்த ரவுடிகள், அவரை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  அரவிந்தை கொலை செய்த மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கொலையாளிகள் பற்றி முக்கிய துப்பு கிடைத்திருப்பதாக துணை போலீஸ் கமிஷனர் அனுஜித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். கால்பந்து மைதானத்திற்குள் புகுந்து ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story