வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம். துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்


வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம். துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 13 Sep 2021 1:47 PM GMT (Updated: 13 Sep 2021 1:47 PM GMT)

வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி கொலை காரணமாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடி

வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி கொலை காரணமாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

கஞ்சா, பட்டா கத்திகள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சிபி சக்கரவர்த்தி தலைமையில், வாணியம்பாடி டவுன் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கஞ்சா கடத்தல், கட்ட பஞ்சாயத்து நடத்திவந்த டீல் இம்தியாஸ் என்பவர் குடோனில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கிருந்து 10 பட்டாக்கத்திகள், 10 செல்போன், 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து இதுதொடர்பாக  3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் உட்பட பலர் கைது செய்யப்படாமல் உள்ளனர். இதனால்தான் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

பணியிடை நீக்கம்

இந்த நிலையில், வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமியை, பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் கஞ்சா பதுக்கி வைத்திருந்த டீல் இம்தியாஸ் உள்ளிட்டவர்களை பிடிக்க தவறியதாக வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் (மெமோ) வழங்கப்பட்டுள்ளது.

கொலை சம்பவத்தை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சிபி சக்கரவர்த்தி பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி பணியிடை நீத்தம் செய்யப்பட்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story