சாத்தனூர் அணையில் ரூ.45 கோடியில் புதிய ஷட்டர்கள் அமைக்கும் பணி தொடங்கியது


சாத்தனூர் அணையில் ரூ.45 கோடியில் புதிய ஷட்டர்கள் அமைக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 13 Sep 2021 5:33 PM GMT (Updated: 13 Sep 2021 5:33 PM GMT)

சாத்தனூர் அணையில் ரூ.45 கோடி செலவில் புதிய ஷட்டர்கள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதனால் இந்த ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.

தண்டராம்படடு

சாத்தனூர் அணையில் ரூ.45 கோடி செலவில் புதிய ஷட்டர்கள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதனால் இந்த ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.

சாத்தனூர் அணை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணை அமைந்துள்ளது. 119 அடி உயரம் கொண்ட இந்த அணை காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டி திறக்கப்பட்டது.
 தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சாத்தனூர் அணையின் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 90-க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் அணையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

சாத்தனூர் அணையில் உள்ள மதகுகளின் ஷட்டர்கள் 63 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப் பட்டதாகும். அதன் பின்பு இதுவரை புதிய ஷட்டர்கள் அமைக்கப்படாமல் பழுதுபார்க்கும் பணிகள் மட்டுமே நடைபெற்று வந்தது. எனவே இந்த ஷட்டர்களை அகற்றிவிட்டு புதிய இரும்பு ஷட்டர்கள் அமைத்து சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

ரூ.45 கோடியில் ஷட்டர்கள்

எனவே கடந்த ஆண்டு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மற்றும் தென்பெண்ணை ஆற்றின் கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் கொண்ட 20 பேர் குழு சாத்தனூர் அணையை நேரில் ஆய்வு செய்து அதன் பின்னர் அணையின் மதகுகளில் உள்ள ஷட்டர்களை புதிதாக அமைக்கவும், அணையின் பூங்காக்களை சீரமைத்து பராமரிக்கவும் ரூ.90 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து தற்போது நபார்டு வங்கியின் மூலம் முதல்கட்டமாக ரூ.45 கோடி செலவில் சாத்தனூர் அணையில் உள்ள 20 ஷட்டர்களை புதிதாக அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் ஷட்டர்கள் அமைக்கும் பணியை திருச்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஏற்று செய்து வருகிறது.

தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை

முதல் கட்டமாக தற்போது அணையின் முகப்பில் உள்ள 9 மதங்களின் ஷட்டர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு ஷட்டர் அமைப்பதற்கு 15 நாட்கள் தேவைப்படுகிறது. எனவே 20 ஷட்டர்களை அமைப்பதற்கு மொத்தம் 300 நாட்கள் தேவைப்படும் என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு அணையில் தண்ணீர் தேக்கி வைக்கவும், பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவும் வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

Next Story