சேந்தமங்கலம் அருகே பயங்கரம்: தி.மு.க. முன்னாள் எம்.பி.யின் பேரன் சரமாரி குத்திக்கொலை-மருமகன் உள்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை


சேந்தமங்கலம் அருகே பயங்கரம்: தி.மு.க. முன்னாள் எம்.பி.யின் பேரன் சரமாரி குத்திக்கொலை-மருமகன் உள்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Sep 2021 6:23 PM GMT (Updated: 13 Sep 2021 6:23 PM GMT)

சேந்தமங்கலம் அருகே தி.மு.க. முன்னாள் எம்.பி.யின் பேரன் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து மருமகன் உள்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேந்தமங்கலம், செப்.14-
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விவசாயி
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சி கல்லிட்டேரி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). விவசாயி. இவர் அந்த பகுதியில் தனக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் மனைவி சுகுணாவுடன் வசித்து வந்தார்.
இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டு கணவர் நவீனுடன் சேலம் மாவட்டம் ஆத்தூரில் வசித்து வருகிறார். 
நிலம் விற்பனை
இதனிடையே ராஜேந்திரனின் மருமகன் நவீன் அவருடைய சொத்தில் தனக்கும் பங்கு தரவேண்டும் என்று கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் தனக்கு சொந்தமான நிலத்தை பேளுக்குறிச்சியை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தார். இதனால் அவருக்கும் உறவினர்கள் சிலருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன், தனது மனைவி சுகுணாவுடன் தோட்டத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். சுமார் 11 மணி அளவில் வீட்டுக்குள் மர்ம நபர்கள் சிலர் புகுந்தனர். அவர்களின் சத்தத்தை கேட்டு கணவன், மனைவி இருவரும் திடுக்கிட்டு எழுந்தனர். திடீரென மர்ம நபர்கள் சுகுணாவை தாக்கினர். அவர்களை ராஜேந்திரன் தடுக்க முயன்றார்.
குத்திக்கொலை
அப்போது அவர்கள் சுகுணாவின் கண் முன்பே ராஜேந்திரனை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கணவர் பிணமாக கிடப்பதை பார்த்து சுகுணா கதறி அழுதார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இந்த பயங்கர சம்பவம் குறித்து பேளுக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்ததும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்.
சொத்து தகராறு?
விசாரணையில், சம்பவம் நடப்பதற்கு முன்பு ஒரு ஆட்டோ அந்த பகுதிக்கு வந்ததும், அதில் இருந்து சில வாலிபர்கள் இறங்கி ராஜேந்திரன் தோட்டத்துக்கு சென்றதும் தெரிந்தது. இதையடுத்து ராஜேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
தொடர்ந்து பேளுக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  நிலத்தை விற்றதில் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என அவருடைய மருமகன் நவீன் உள்பட 5 பேரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் எம்.பி. பேரன்
கொலை செய்யப்பட்ட ராஜேந்திரன் தி.மு.க. முன்னாள் எம்.பி. ஜி.பி.சோமசுந்தரத்தின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
மனைவியின் கண் முன்பே விவசாயி சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story