பெண்ணுக்கு 2 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திய நர்சு


பெண்ணுக்கு 2 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திய நர்சு
x
தினத்தந்தி 13 Sep 2021 7:00 PM GMT (Updated: 13 Sep 2021 7:00 PM GMT)

பெண்ணாடத்தில் பணியின்போது சக ஊழியரிடம் பேசியபடி ஒரு பெண்ணுக்கு 2 முறை கொரோனா தடுப்பூசியை நர்சு செலுத்தினார். இதை கண்டித்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்ணாடம், 

பெண்ணாடம் இருளர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 50). கட்டிட தொழிலாளி. இவர் பெண்ணாடத்தில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக நேற்று காலை மகன் அய்யப்பனுடன் சென்றார். 
அப்போது அங்கு பணியில் இருந்த நர்சு ஒருவர், அருகில் இருந்த மற்றொரு நர்சிடம் பேசிக்கொண்டே லட்சுமிக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி முதல் டோசை போட்டார். 
அதன்பிறகு அதே நர்சு மற்றொரு நர்சிடம் சுவாரசியமாக பேசிக்கொண்டே 2-வது முறையாக லட்சுமிக்கு தடுப்பூசியை செலுத்த முயன்றார். இதில் பதறிய லட்சுமி, எனக்கு இப்போதுதான் தடுப்பூசி போட்டீர்கள் என்று நர்சிடம் தெரிவித்தார். 

வாக்குவாதம்

ஆனால் அந்த நர்சு அதை காதில் வாங்கி கொள்ளாமல், பேசியபடி கண் இமைக்கும் நேரத்தில் லட்சுமிக்கு ஏற்கனவே செலுத்திய இடது கையில் மீண்டும் 2-வது முறையாக தடுப்பூசியை போட்டதாக தெரிகிறது.  இதில் பதறிய லட்சுமி, 2 முறை தடுப்பூசி போட்டதை தனது மகன் அய்யப்பனிடம் தெரிவித்தார். 
இதையடுத்து அய்யப்பன், சம்பந்தப்பட்ட நர்சிடம் விளக்கம் கேட்டு முறையிட்டார். அதற்கு அந்த நர்சு ஒரு முறைதான் நான் தடுப்பூசி போட்டேன் என்று கூறினார். அப்போது லட்சுமியின் உறவினர்கள், அஙகிருந்த டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கண்காணிப்பு

அப்போது லட்சுமி தனக்கு 2 முறை தடுப்பூசி போட்டதில் ஏற்பட்ட தழும்பை அங்கிருந்த டாக்டரிடம் காட்டினார். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சுமியை மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்க டாக்டர்கள் ஏற்பாடு செய்தனர்.
 இது குறித்து நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் தமிழரசனிடம் கேட்டபோது, சராசரியாக ஒரு மனிதனின் உடலில் 0.5 எம்.எல். தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு மனிதனுக்கு உடலில்  சராசரியாக 1 எம்.எல். அளவிற்கு தடுப்பூசி செலுத்தலாம். 
எனவே லட்சுமிக்கு 2 முறை தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்தாலும் அவருக்கு எந்த பாதிப்பு ஏற்படாது. இருப்பினும் அச்சத்தை போக்க லட்சுமியை மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார்.

Next Story