ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் விண்ணப்பங்களை பெற குவிந்த மாணவர்கள்


ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் விண்ணப்பங்களை பெற குவிந்த மாணவர்கள்
x
தினத்தந்தி 13 Sep 2021 7:26 PM GMT (Updated: 13 Sep 2021 7:26 PM GMT)

ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்களை பெற மாணவ-மாணவிகள் குவிந்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டி

ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்களை பெற மாணவ-மாணவிகள் குவிந்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர் சேர்க்கை

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், சுற்றுலா, பி.காம். சி.ஏ., பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணினி அறிவியல், விலங்கியல் மற்றும் வன உயிரியல் உள்பட 18 பாடப்பிரிவுகள் உள்ளன. இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை  ஆன்லைன் மூலம் நடந்தது. ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் மாணவ-மாணவிகள் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்வு செய்து கல்லூரியில் சேர்ந்தனர்.


இதற்கிடையே கல்லூரியில் முதல் ஷிப்டில் (அதாவது காலை) சேர்ந்து படிக்க பலர் ஆன்லைன் மூலம் தேர்வு செய்தனர். இதனால் 2-வது ஷிப்டில் அதிக காலியிடங்கள் உள்ளது. இதை நிரப்புவதற்காக நேற்று முதல் நாளை (புதன்கிழமை) வரை விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்று கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி நேற்று கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் குவிந்தனர்.


800 விண்ணப்பங்கள்


நுழைவு வாயில் மற்றும் விண்ணப்பம் பெறும் இடத்தில் மாணவ-மாணவிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் அங்கு சமூக இடைவெளியை கடைபிடிப்பது கேள்விக்குறியானது. மாணவர்கள் முண்டி அடித்தபடி விண்ணப்பங்களை வாங்க கூட்டமாக நின்றிருந்தனர். இதனால் தொற்று பரவும் அபாயம் இருந்தது. மேலும் மாணவர்கள் கேட்ட பாடப்பிரிவு மற்றும் ஷிப்ட் முறை இல்லாததால் விண்ணப்பங்களை வினியோகித்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


மேலும் கூட்டம் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து மாணவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக பிளஸ்-2 முடித்த மாணவர்கள் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 800 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளது.

Next Story