கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் அடுத்தடுத்த கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு


கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் அடுத்தடுத்த கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு
x
தினத்தந்தி 14 Sep 2021 4:06 PM GMT (Updated: 14 Sep 2021 4:06 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கொண்டு வலைவீசி தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை பஜாரில் மாரியப்பன் (வயது 37) என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் அவர் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் இரும்பு ஷெட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

நள்ளிரவில் கடையின் உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த கல்லா பெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ.52 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. அதே போல அருகே உள்ள தனஞ்ஜெயம் (23) என்பவருக்கு சொந்தமான முடிதிருத்தும் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த கல்லா பெட்டியை உடைத்து அதிலிருந்த ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் திருடிச்சென்றனர்.

இது தவிர அருகே உள்ள மனோகர் (48) என்வருக்கு சொந்தமான போட்டோ ஸ்டூடியோ, பிரசன்னராஜ் (52) என்பவருக்கு சொந்தமான அடகு கடை ஆகிவற்றின் பூட்டையும் மர்ம ஆசாமிகள் உடைக்க முயற்சி செய்து உள்ளனர்.

புறக்காவல் நிலையம்

ஆனால் ஆள்நடமாட்டம் காரணமாக தங்களது முயற்சியை கைவிட்டு மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி விட்டனர். மர்ம ஆசாமிகளின் கைரேகை தடயங்களை சேகரித்த போலீசார், அவர்கள் விட்டு சென்ற கடப்பாரை மற்றும் இரும்பு பொருட்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் பதிவுகளில் மர்ம ஆசாமிகள் குறித்த அடையாளங்கள் பதிவாகி உள்ளதால் அதனை கொண்டு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். கவரைப்பேட்டை பஜாரில் அடுத்தடுத்த கடைகளில் நடைபெற்று உள்ள திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து கவரைப்பேட்டை பஜாரில் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரித்து மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story