கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 15 பறக்கும் படைகள்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 15 பறக்கும் படைகள்
x
தினத்தந்தி 14 Sep 2021 5:11 PM GMT (Updated: 14 Sep 2021 5:11 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

9 ஒன்றியங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 180 ஒன்றிய வார்டு உறுப்பினர், 412 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 9 லட்சத்து 61 ஆயிரத்து 914 வாக்காளர்கள் உள்ளனர். 
திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு அடுத்த மாதம்(அக்டோபர்) 6-ந் தேதி 939 வாக்குச்சாவடிகளிலும், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன்மலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2-வது கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 9-ந் தேதி 950 வாக்குச்சாவடிகளிலும் நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணும் மையம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 21 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 549 உதவி தேர்தல் நடத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். 2 கட்ட வாக்கு பதிவுக்கு மொத்தம் 10 ஆயிரத்து 384 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணி நியமனம் செய்ய அலுவலர்கள் விவரப்பட்டியல் இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. 
பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணுவதற்கு ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஒரு வாக்கு எண்ணும் மையம் என்ற விகிதத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் 9 வாக்கு எண்ணும் மையங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 

தேர்தல் முடிவு

வாக்கு எண்ணும் பணி முடிவுற்றவுடன் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவி இடங்களுக்கான தேர்தல் முடிவுகள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் அறிவிக்கப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாதிரி நடத்தை விதிகளை பின்பற்ற 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 15 துணை தாசில்தார்கள், 45 போலீசார்கள் பணியாற்ற உள்ளனர். 

கட்டுப்பாட்டு அறை

பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளவும், புகார்களை தெரிவிக்கவும் கட்டணமில்லா தொலைபேசி எண்-18004258510 இணைப்புடன் கூடிய கட்டுப்பாட்டு அறை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story